இந்திய வெளிவிவகாரச் செயலரைச் சந்தித்த மலையகக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள்! – காணி உரிமை, வீட்டுத்திட்டம் குறித்து வலியுறுத்து.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கும் இந்திய வம்சாவளித் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி. மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர்.

சந்திப்பின்போது, இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் மற்றும் இந்திய அரசின் பல்வேறு அபிவிருத்தி முன்முயற்சிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, 2025 ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள், 2026 ஏப்ரல் மாதம் இந்தியத் துணை ஜனாதிபதி மேற்கொண்ட விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகள், மேலும் டித்வா புயலால் மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து இந்திய அரசால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மீள்கட்டமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆராயப்பட்டது.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி., மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான விடயங்களை இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் கலந்துரையாடியதாகக் கூறினார்.

மேலும், காணி உரிமை மற்றும் மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

காணி உரிமை தொடர்பாக ஜனாதிபதியுடனும் கலந்துரையாடியிருந்ததாகத் தெரிவித்த அவர், வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் காரணமாக காணி வழங்கும் விடயத்தில் சிக்கல் நிலவுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்ததாகவும் கூறினார்.

எனினும், சீரற்ற காலநிலை காரணமாக வட்டவளை, அக்கரகப்பத்தனை, நாவலப்பிட்டி உள்ளிட்ட மலையகப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தை அரசு தாமதமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் முன்வைத்ததாக ஜீவன் தொண்டமான் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.