உறவுகளைத் தேடிய 125 பேர் இதுவரை உயிரிழப்பு!

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி அலையும் உறவுகளில் 125 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி அவர்களது உறவுகள் பல்வேறு போராட்டங்களை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி அலையும் பெற்றோர்கள் பல துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து வயோதிபக் காலங்களில் நோய்வாய்பட்டு வைத்தியசாலைகளிலும், ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு தமது உறவுகளைத் தேடி அலைந்த 125 பேர் நோயால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 17 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வீதிகளிலிருந்து தமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேசத்தின் தலையீடுகளைக் கோரியும், ஐக்கிய நாடுகள் சபை தமது விடயங்களில் தலையீடு செலுத்தி தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தியும் உறவுகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களது போராட்டம் இன்றுடன் 2 ஆயிரத்து 128 நாட்களை எட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.