காப்பாற்றப்பட்ட ரோகிங்கியர்கள் யாழ். சிறையில்! – மிரிஹான குடிவரவுத் தடுப்பு மையத்துக்கு மாற்ற உத்தரவு.

இலங்கையின் வடக்குக் கடற்பரப்பில் பழுதடைந்த படகில் தத்தளித்த சமயம் கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட 105 ரோகிங்கியர்களில் 104 பேரை உடனடியாக யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றி, அங்கிருந்து மிரிஹானவில் உள்ள குடிவரவு தடுப்புமையத்துக்கு அனுப்பவும், மற்றைய ஒருவரை விளக்க மறியல் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்களில் 104 பேர் நேற்றிரவு யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

பர்மாவில் இருந்து விரட்டப்பட்ட ரோகிங்கிய இன முஸ்லிம்கள் பங்களாதேஷில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்டவிரோதமாகப் பயணித்தபோதே நடுக்கடலில் படகு பழுதடைந்து 3 வாரங்களாக நடுக் கடலில் தத்தளித்தபோது இலங்கைக் கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை காப்பாற்றப்பட்டனர்.

இந்நிலையில், படகில் பயணித்த 105 பேரில் 104 பேர் யாழ்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட அதேநேரம் படகு உரிமையாளரான முகமது உசைனை எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்க மறியளில் வைக்க மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேநேரம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட ரோகிங்கியர்களில் படகோட்டி தவிர்ந்த ஏனையோர் இன்று அல்லது நாளை மிரிஹானவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.