போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றிய இளைஞர் ஒருவர் மரணம் – யாழில் இதுவரை 15 பேர் சாவு.

யாழ்ப்பாணத்தில் அளவுக்கதிகமான போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் யாழ்ப்பாணத்தில் திணைக்களம் ஒன்றில் அலுவலக உதவியாளராகக் கடமையாற்றுபவர். கடந்த செவ்வாய்க்கிழமை காலை வேலைக்குச் சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்த இவர், உணவு கூட உட்கொள்ளாது வேறு சில இளைஞர்களுடன் சென்றுள்ளார். பின்னர் இவர் நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துவிட்டு அங்குள்ள மரக்குற்றி ஒன்றில் அமர்ந்திருந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மாலை 5 மணியளவில் அவர் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில், அங்குள்ளவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மாலை 6 மணியவில் அவரைச் சேர்ப்பித்தனர். ஆயினும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இளைஞரும், அவருடன் சென்ற மூவரும் போதைப் பொருளை ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளைஞருடன் சென்றவர்களில் மூவர் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிய பின்னர் எஞ்சியிருந்த போதைப்பொருள் அனைத்தையும் இளைஞருக்கு ஏற்றியுள்ளனர் என்றும் விசாரணையில் கூறப்படுகின்றது.

மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

இளைஞரின் உயிரிழப்புக்கு அதிகளவு போதைப்பொருள் உடலில் ஏற்றப்பட்டமையே காரணம் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் மூவர் தலைமறைவாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இதுவரை போதை ஊசியால் சுமார் 15 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

Leave A Reply

Your email address will not be published.