யாழ். வடமராட்சி கிழக்கில் தனித்து வாழ்ந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழ்., வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மணற்காடு பழைய தேவாலயத்துக்குப் பின்பாக உள்ள வீட்டில் வசித்து வந்த கந்தசாமி பன்னீர்ச்செல்வம் (வயது 56) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவருடைய சமையலறையில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக அவருடைய நடமாட்டத்தை அவதானிக்க முடியவில்லை என்றும், நேற்று வீட்டில் துர்நாற்றம் வீசியது என்றும் கிராம அலுவலருக்கு மக்கள் அறிவித்தனர்.

கிராம அலுவலரும் மக்களும் இணைந்து வீட்டைத் திறந்து பார்த்த போது சமையலறையில் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டது.

சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தபோது அவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நபரின் மனைவி 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்திருந்ததால் பன்னீர்ச்செல்வம் தனியாகவே வாழ்ந்து வந்தார் என்று அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.