நீங்கள் சட்டத்தரணியா? வெட்கமே இல்லையா? – அலி சப்ரியைப் போட்டுத் தாக்கிய கிரியெல்ல.

“தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தைப் பயன்படுத்தித் தேர்தலை இடைநிறுத்தினால் நீதிமன்றம் செல்வோம். அதேநேரம் தேர்தலை இடைநிறுத்துவதன் மூலம் நாட்டில் பாரிய பிளவு ஏற்படும் என அரசுக்கு எச்சரிக்கின்றோம்” என்று தெரிவித்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி., அமைச்சர் அலி சப்ரியைப் பார்த்து, “நீங்கள் சட்டத்தரணியா? வெட்கம் இல்லையா?” எனக் கேட்டதால், அமைச்சர் அலிசப்ரிக்கும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பிக்கும் இடையில் கடும் தர்க்கமும் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் பேசுகையில்,

“அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்ற தைரியத்திலேயே கோட்டாபய அரசு அரசமைப்பின் 21ஆவது திருத்தத்தை யாருடனும் கலந்துரையாடாமல் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தது. கோட்டாபயவின் வழக்கு விசாரணைகளைச் சட்டத்தரணிகள் குழுவொன்றே 21ஆவது திருத்தத்தைத் தயாரித்தது. அதனையே அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்தத் திருத்தத்துக்கு நாங்கள் 25 திருத்தங்களை சமர்ப்பித்திருந்தோம். ஒன்றையேனும் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என அமைச்சர் அலிச ப்ரி தெரிவிக்கின்றார். இவ்வாறு தெரிவிக்க இவர்களுக்கு இவருக்கு வெட்கம் இல்லையா? இவர் ஒரு சட்டத்தரணியா?” – என்று கேள்வி எழுப்பினார் .

இதன்போது சபையில் இருந்த அமைச்சர் அலி சப்ரி எழுந்து, “நான் சட்டத்தரணி என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் சார்பாகவும் நீதிமன்றம் சென்றிருக்கின்றேன். ஆனால், நீங்கள் ஒரு நாளாவது நீதிமன்றத்துக்குச் சென்று வழக்குகளில் ஈடுபட்டிருக்கின்றீர்களா? அதனால் என்னை விமர்சிக்க உங்களுக்குத் தகுதி இல்லை” – என்றார்.

இதையடுத்து லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. கூறுகையில், “நாடாளுமன்றக் குழுக்களுக்கு சமர்ப்பிக்காமலே 21ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துக்கொண்டனர். 21ஆவது திருத்தம் சரி என்றால் ஏன் 3 வருடங்களில் மாற்றினீர்கள். 21ஆவது திருத்தம் மூலம் அரச நிர்வாகம், அரச நிறுவனங்களை ஜனாதிபதிக்கு கீழ் கொண்டுவந்து செயற்பட்டனர். அதனால் ஒட்டுமொத்த அரச நிர்வாகத்தையும் செயலிழக்கச் செய்து, நாட்டை வங்குராேத்து அடையச் செய்தனர்” – என்றார்.

இதன்போது மீண்டும் குறுக்கிட்ட அமைச்சர் அலி சப்ரி, “21ஆவது திருத்தத்தை முறையாகவே நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தோம். பொய் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம்” – என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி., “தேர்தல் நடத்தப் பணம் இல்லை என அரச சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்திருக்கின்றனர். நாட்டை வங்குராேத்து அடையச் செய்து இன்னும் அரசில் இருப்பதற்கு வெட்கம் இல்லையா? அட்டை போன்று அரசில் தொங்கிக்கொண்டிருக்காமல் இராஜிநாமா செய்யுங்கள். தேர்தல் ஒன்றுக்கு அறிவிப்பு செய்துள்ள நிலையில் இந்தச் சட்டமூலத்தைக் கொண்டு வந்திருப்பது தேர்தலைப் பிற்போடுவதற்காகும். தேர்தலைப் பிற்போட்டால் நீதிமன்றம் செல்வோம். அதேநேரம் தேர்தலைப் பிற்போடுவதன் மூலம் நாட்டில் பாரிய பிளவு ஏற்படும் என அரசை எச்சரிக்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.