தேர்தல் களத்திலிருந்து ‘யானை’யும் ‘மொட்டு’வும் தாராளமாக விலகலாம்! – சுதந்திர மக்கள் சபை பதிலடி.

“மக்களின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஊடாக விளங்கிக்கொள்ள முடியும். தேர்தலில் போட்டியிடத் தயாரில்லையெனில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தேர்தல் களத்திலிருந்து தாராளமாக விலகிக்கொள்ளலாம்.”

இவ்வாறு சுதந்திர மக்கள் சபையில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ள நிலையில் தேர்தலைப் பிற்போட ஏதேனும் புதிய வழிமுறை இல்லையா என்பதை அரசு ஆராய்ந்து வருகின்றது. தேர்தல் தொடரபில் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

தேர்தல் இல்லாத நாட்டில் ஜனநாயகம் இல்லை. நாட்டு மக்களின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை தேர்தல் ஊடாகவே விளங்கிக்கொள்ள முடியும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு மக்கள் ஆணை கிடையாது.

மக்கள் ஆணை இல்லாத அரசுக்குச் சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது. மக்களின் அரசியல் நிலைப்பாடு எத்தன்மையில் உள்ளது என்பதை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஊடாக சர்வதேசம் விளங்கிக்கொள்ளும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் தேர்தலுக்குத் தயாரில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்குத் தயாரில்லையெனில் தேர்தல் களத்திலிருந்து தாராளமாக விலகிக்கொள்ளலாம் .

69 இலட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மக்களால் பதவி நீக்கப்பட்டார். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். மக்கள் ஆணை தொடர்பில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.