மக்களைச் சட்டவிரோதமாகச் சிறையில் அடைக்க இது சர்வாதிகார நாடல்ல!

“மக்களைச் சட்டவிரோதமாகச் சிறையில் அடைக்க நம் நாடு ஒரு சர்வாதிகார அல்லது எதேச்சதிகார நாடல்ல.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் வரிச்சுமை அதிகரித்து, மின் கட்டணமும் அதிகரித்து, மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்ட முடியாத நிலையில் இந்நாட்டின் துன்பப்படும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை மிகுந்த வேதனையளிக்கின்றது.

சிறைப்படுத்தப்பட்டுள்ள ஆனந்த பாலித மற்றும் சஞ்சீவ தம்மிக்க ஆகியோருக்கு இந்நாட்டின் நீதித்துறை ஊடாக நீதி கிடைக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும், எரிசக்தி துறையில் நிலவும் ஊழலுக்கு எதிராகவும், தற்போதைய அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராகவும் அவர்கள் முன்நின்று குரல் எழுப்பினர். அவர்கள் எந்த வன்முறை நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

அரசமைப்பு வழங்கிய பேச்சுரிமையை அவர்கள் பயன்படுத்தினர். மக்களைச் சட்டவிரோதமாக சிறையில் அடைக்க நம் நாடு ஒரு சர்வாதிகார அல்லது எதேச்சதிகார நாடல்ல. இது ஓர் ஜனநாயக நாடு. எனவே, இவ்விருவரினது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க, ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும். அவர்களின் விடுதலைக்காகச் சாத்தியமான அனைத்து அமைதியான, ஜனநாயக மற்றும் சட்ட ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நான் முன்நிலை வகிப்பேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.