தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! வானிலை முன்னறிவிப்பு

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் சில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தது. சென்னையில் இன்று அதிகாலை சிறிது நேரம் மழை பெய்த நிலையில், 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பிப்ரவரி 1ஆம் தேதி இலங்கை கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், “தென்மேற்கு வங்காள விரிகுடா, இலங்கைக் கடற்கரை, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதி மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.