யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் அறைகளில் ரகசிய கமரா

யாழ். ஹோட்டல் ஒன்றில் தங்கிய , இந்தியாவைச் சேர்ந்த திருமண ஜோடி ஒன்றின் புகைப்படங்கள் மற்றும் தேனிலவுக் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை தந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் அறைகளில் ரகசிய கமரா பொருத்தப்பட்டு, அங்கு நடக்கும் விடயங்கள் பொதுவெளியில் பகிரப்பட்டு வருவதாக யாழ் சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர அறைக்குள் நடக்கும் காட்சிகளை யாழ்ப்பாண இளைஞர்களுக்கு நேரலையில் காட்டி பணம் பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட வேலை ஏற்பாடு பற்றியும் யாழ் சுற்றுலா வழிகாட்டிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் பல அறைகளில் இரகசிய கமராக்கள் பொருத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம், அதிகாரிகளிடம் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

இந்த சுற்றுலா விடுதியில் சமீபத்தில் திருமணமான இந்தியாவை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று வந்து தங்கியிருந்ததாகவும், அவர்களின் அந்தரங்க நிகழ்வுகளை ரகசிய கேமராக்கள் மூலம் படம் எடுத்துள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் சி.கார்த்திகன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் கூட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரப்பப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ள செயலாளர், இந்த நிலைமையால் யாழ்ப்பாணத்தில் உள்ள சுற்றுலா வழிகாட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

சுற்றுலா ஹோட்டல்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று இரகசிய கமெராக்களின் உதவியுடன் பெறப்படும் காட்சிகளை யாழ்ப்பாண இளைஞர்களுக்கு நேரலையில் காட்டி பணம் சம்பாதிப்பதாக ஒரு வதந்தி நிலவுவதாகவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.