பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் எனக் கூறி இனிப்பு வழங்கிய பழ.நெடுமாறன்

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் எனக் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈழப்போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக தஞ்சாவூர் விளார் கிராமத்தில் கட்டப்பட்டிருக்கிற முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களைச் சந்தித்தார். கவிஞர் காசி. ஆனந்தன் உள்ளிட்ட பலர் அவருடன் இருந்தனர். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய உண்மை அறிவிப்பு எனப் பேசத் தொடங்கிய பழ. நெடுமாறன், “தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சர்வதேசச் சூழலும், இலங்கையில் ராஜபக்‌சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்கவிருக்கிறார். தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்.

தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டிருக்கிறது. அதோடு, இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம். நடவடிக்கைகளை இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்குத் தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பு மூலம் நான் அறிந்த செய்தியை அவர்கள் அனுமதியுடன் தற்போது தெரிவித்திருக்கிறேன். பிரபாகரன் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்பது உலகம் முழுவதும் இருக்கக்கக்கூடிய தமிழர்களின் ஆவலாக இருக்கிறது விரைவில் அவர் வெளிப்படுவார். அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். இந்தச் செய்தி ஈழத் தமிழர்களுக்கு நன்மையும், நம்பிக்கையும் கொடுக்கும்” என்றார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.