போராட்டக்காரர்களே ரணிலை அரியணையில் ஏற்றினார்கள்! – ‘மொட்டு’க்குத் தொடர்பில்லை என்கிறார் பஸில்.

“ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கியது போராட்டக்காரர்களே. அதனூடாகவே அவர் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்தார். போராட்டக்காரர்களின் கோரிக்கையைக் கோட்டாபய கனகச்சிதமாக நிறைவேற்றினார். இதற்கும் மொட்டுக் கட்சியினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கியது மொட்டுக் கட்சியினர் அல்லர். போராட்டக்காரர்களே அவரைப் பிரதமராக்கினார்கள். அவர்கள்தான் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும், எதிர்க்கட்சியில் இருந்து ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் கோரினார்கள்.

நாங்கள் மஹிந்தவே பிரதமராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தோம். மஹிந்தவைத் தவிர வேறு எவரையும் பிரதமராக நியமிப்பதற்கு நாங்கள் விருப்பம் இல்லை என்று உறுதியாகக் கூறினோம். ஆனால், கோட்டாபய அவரது விருப்பத்தின்படி ரணிலைப் பிரதமராக நியமித்தார்.

மஹிந்தவுக்கு மக்கள் ஆணை இல்லை. அவரைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குங்கள் என்று கோட்டாவுக்கு
கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. அதனால்தான் அவர் ரணிலைப் பிரதமராக நியமித்தார்.

அவர் பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கும் பின்னர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமைக்கும் எங்களுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை.

பின்னர் நாடாளுமன்றின் ஊடாக ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை வந்தபோது அப்போதைய வேட்பாளர்களை ஆராய்ந்து பார்த்து ரணிலை ஜனாதிபதியாக்குவதற்கு நாம் முடிவெடுத்தோம்.

மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை. அவர்தான் இப்போதும் பிரதமராக இருந்திருக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.