வாக்குரிமையை மீறினால் சட்ட நடவடிக்கை! – அரசுக்கு எதிரணி எச்சரிக்கை.

“தேர்தல் என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். அதனைத் திட்டமிட்டுக் காலம் தாழ்த்துவது சட்டவிரோத செயற்பாடாகும். எனவே, மக்களின் வாக்குரிமையை மீறும் வகையில் அரசு செயற்படுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“சட்டம் மற்றும் அரசமைப்புக்கமைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அரசு சட்டத்துக்கு விரோதமாகச் செயற்படுமானால் நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம். அரசுக்குச் சட்டவிரோதமாகச் செயற்பட முடியாதல்லவா?

தேர்தல் என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். அவ்வாறிருக்கையில் அதனைத் திட்டமிட்டுக் காலம் தாழ்த்துவது சட்டவிரோத செயற்பாடாகும். அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்தினுடையதாகும். அதற்கமைய நீதிமன்றம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் என்று நம்புகின்றோம்.

பொருளாதாரத்தைச் சீரழித்ததன் பின்னர் துரித தீர்வைக் காண முடியாது. ஓரிரு வருடங்களில் இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு கண்டு விட முடியும் என்று எண்ண வேண்டாம்.

அவ்வாறு துரித தீர்வு எதுவும் இல்லை. நாட்டில் தற்போது ரூபாவும் இல்லை, டொலரும் இல்லை. இன்னும் நீண்ட காலத்துக்கு எவ்வித பேதமும் இன்றி அனைவரும் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டும்.

இலங்கை ஒரு பௌத்த நாடாகும். எனவே, புத்த சாசனத்தைப் பாதுகாப்பவர்களையே மக்கள் தெரிவு செய்வர். கடந்த காலங்களில் சுமார் 50 பௌத்த தேரர்களைக் கொலை செய்த ஜே.வி.பி.க்கு மக்கள், ஆட்சி அதிகாரத்தை வழங்கப்போவதில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.