ஊடக அறிக்கையின் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முடியாது! – ஆணைக்குழு பொறுப்பற்ற நடவடிக்கை.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறாது என்று ஊடக அறிவிப்பு ஊடாக மாத்திரம் அதனை ஒத்திவைக்க முடியாது என்று சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த நடவடிக்கை தவறானது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கூடியது. வர்த்தமானியில் அறிவித்தவாறு மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாது என்றும் மார்ச் 3ஆம் திகதி புதிய திகதி தொடர்பில் ஆணைக்குழு அறிவிக்கும் என்று ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டது.

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதென்றால், அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களையும் அழைத்து கூட்டம் நடத்தி அதன் பிரகாரம் வர்த்தமானியில் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான அறிவித்தலை வெளியிட வேண்டும் என்றும், அதுவே சட்டரீதியானது என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.