எம்மை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு போன இங்கிலாந்துக்கு, மலையக தமிழர் தொடர்பில் தார்மீக கடமை இருக்கின்றது.

“இதற்கு பிரதியுபகாரமாக, நன்றிகெட்டத்தனமாக 1948ல் எமது மக்களின் குடியுரிமைதான் பறிக்கப்பட்டது. வாக்குரிமைதான் பறிக்கப்பட்டது. நமது மக்கள் பலவந்தமாக 1964ல் சிறிமா-சாஸ்திரி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் நாடு கடத்தப்பட்டார்கள்.

இது நடக்கும் போது, சிலோன் என்ற இலங்கை ஒரு பிரிட்டீஷ் ஆதிக்க நாடாக இருந்தது. 1972ல் குடியரசு ஆகும்வரை, இலங்கையில் பிரித்தானிய அரசாட்சிக்கு பதில் சொல்லும் மகாதேசாதிபதியே ஆட்சியில் இருந்தார். 1948ன் சோல்பரி அரசமைப்பின் 29ம் பிரிவும் எம்மை காப்பாற்றவில்லை. ஆகவே இன்றைய பிரிட்டீஷ் அரசரின் அரசாங்கம் இலங்கை மலையக தமிழரின் மீது பாரிய தார்மீக பொறுப்பையும், கடமையும் கொண்டுள்ளது.”

“இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் எமது பிரச்சினைகளை கையாளும் பொறுப்பை முழுமையாக விட்டு விட வேண்டாம். அது சரி வராது. இந்தியா ஏற்கனவே, இலங்கையுடனான தமது நட்புறவை எமது விஷயத்திலும் அவ்வப்போது பயன்படுத்துகிறது. ஆனால், அது எமக்கு போதாது. அவர்களுக்கு அவர்களது சொந்த தேசிய கரிசனைகள் அநேகம் உள்ளன. அவை எமது விஷயங்களை விட முன்னுரிமை கொண்டவை. எமக்கு அவை தெரியும்.”

“தேசிய நீரோட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படாத காரணத்தால், நாம் ஒதுக்கப்படுகிறோம்.எமக்கு பிரிட்டீஷ் உதவியும் தேவை. பிரிபடாத ஒரே இலங்கைக்குள் எமது சமூக-அரசியல் அபிலாஷைகளை அடையவும், கடந்த காலங்களில் இழந்த உரிமைகளை பெறவும் நாம் பாடுபடுகிறோம். எமது மக்கள் ஜனதொகையில் மூன்றிலொன்றுக்கு குறைவில்லாத பிரிவினர் இன்னமும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர்.

ஒட்டுமொத்த இலங்கையில் மிகவும் பின்தங்கிய நலிந்த பிரிவினராக அவர்கள் இருக்கின்றார்கள். ஐநா மனித உரிமை ஆணையகத்தின் நவீன கொத்தடிமை தொடர்பிலான விசேட அறிக்கையாளர், ஐநா நிறுவனங்கள், உலக வங்கி, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவை முன்வைத்துள்ள கணிப்பீடுகளின்படி, இந்த துன்பகரமான உண்மைகள் உலகறிய செய்யப்பட்டுள்ளன. ஆகவே பிரிட்டீஷ் அரசு, விசேட ஒதுக்கீட்டு திட்டங்களின் அடிப்படையில் பெருந்தோட்ட மக்களுக்கு உதவிட வேண்டும்.”

“நாங்கள் இந்நாட்டில் முழுமையான பிரசைகள் ஆக உதவுங்கள். நம் நாட்டிற்கு நீங்கள் வாழ்வாதார உதவிகள் வழங்கும் போது, இலங்கையில் மிகவும் பின்தங்கிய நலிந்த பிரிவினரான, பெருந்தோட்ட பாமர மக்களுக்கு அவை கிடைகின்றனவா என கேள்வி எழுப்புங்கள். தேடுங்கள். எமக்காக இலங்கை அரசுடன் பேசுங்கள். நாம் இல்லாமல் இலங்கை முழுமையடையாது என்பது இனிமேல் மனதில் கொள்ளுங்கள்.”

Leave A Reply

Your email address will not be published.