போலி டாக்டர் பட்ட விவகாரம்… தலைமறைவாக இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது

சினிமா பிரபலங்களுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹரிஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பிப்ரவரி 26-ம் தேதி விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. அதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது மற்றும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அந்த வகையில் இசை அமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேல், நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் உள்ளிடோருக்கு கௌரவ முனைவர் பட்டம் மற்றும் விருது வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

தனியார் அமைப்பு சார்பில் டாக்டர் பட்டம் வழங்கியதும், நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைகழகம் இடம் வழங்கியதும் சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து தவறாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

அதன்படி நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் இயக்குனரான ராஜு ஹரிஷ் என்பவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கிய நிலையில், அவர் தலைமறைவானதால், காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் முன்ஜாமின் கோரி ராஜு ஹரிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் தலைமறைவாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹரிஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.