மரக்கறி டிப்பர் பள்ளத்தில் வீழ்ந்ததில் 14 பேர் காயம்!

மரக்கறி ஏற்றச் சென்ற டிப்பர் ஒன்று பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற டிப்பரே கொண்டக்கலை பகுதியில் இன்று காலை விபத்தில் சிக்கியுள்ளது.

காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஐவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார் .

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து லபுக்கலைப் பகுதிக்கு மரக்கறி வகைகளை அறுவடை செய்து ஏற்றச் சென்ற டிப்பர் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்தது எனவும், இதனைத் தொடர்ந்து டிப்பரின் பின் பகுதியில் அமர்ந்து பயணித்தோர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.