இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு டிமென்சியா நோய் பாதிப்பு.. சர்வதேச ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உலக அளவில் டிமென்சியா(Dementia) எனப்படும் ஞாபக மறதி நோய் பாதிப்பு என்பது கவலைக்குரிய ஒன்றாக சமீப காலத்தில் உருவெடுத்துள்ளது. குறிப்பாக இந்த நோயால் வயதானவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதிலும் 5 கோடி பேருக்கு அதிகமானோர் டிமென்சியா என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூளைக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதால் டிமென்ஷியா ஏற்படுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட நபரின் மூளையின் செயற்பாடு படிப்படியாக பாதிக்கப்பட்டு, அவரது நினைவாற்றல், சிந்திக்கும் திறன், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன், உடலின் செயல்பாடு உள்ளிட்டவை பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த நோய் பாதிப்பு தன்மை குறித்து இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழகம், அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், எய்ம்ஸ் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

உலகிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு மாதிரி முறையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக இந்தியாவில் உள்ள 31,477 வயது வந்தோர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆய்வில் அதிர்ச்சிக்குரிய தகவல்களும் புள்ளி விவரங்களும் வெளியாகியுள்ளது. அதன்படி, நாட்டில் வசிக்கும் 8.8 சதவீத முதியோருக்கு டிமென்சியா நோய் பாதிப்பு உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

அந்த எண்ணிக்கையை வைத்து பார்கும் போது, இந்தியாவில் சுமார் ஒரு கோடி முதியோர் ஞாபக மறதி நோயான டிமென்சியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 8.8 சதவீதம் பேருக்கும், பிரிட்டனில் 9 சதவதம் பேருக்கும் ஜெர்மனியில் 8.5 சதவீதம் பேருக்கும் இந்த நோய் பாதிப்பு உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. பலருக்கும் இந்த நோய் குறித்த போதிய அறிவோ விழிப்புணர்வோ இல்லாத நிலையில், 2030ஆம் ஆண்டுக்குள் 19.1 சதவீதம் பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.