தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்!

2019-ல் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து டெல்டா, ஒமைக்ரான் என அதன் திரிபு வகை வைரஸ்களும் உலகை புரட்டிப் போட்டன. சுமார் 2 ஆண்டுகளாக நம்மை வீட்டிலேயே முடக்கி வைத்திருந்த கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 334 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று, தமிழ்நாட்டிலும் மெல்ல மெல்ல தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் 34 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் 83 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

புறநோயாளிகள் பிரிவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே நேரத்தில், தொற்று உறுதியாகும் விகிதமும் உயர்ந்துள்ளதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருந்தியல் துறை தலைவர் பரந்தாமன் தெரிவித்துள்ளார். அரசு கூறும் எண்ணிக்கைகளை விட கொரோனா பாதிப்பு உண்மையில் அதிகமாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தற்போது அதிகமாக பரவும் XBB 1.16 வகை கொரோனா வைரஸ், ஒமைக்ரான் வகையின் உட்பிரிவே என்பதால் பெரிதாக உயிரிழப்புகள் இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால், மீண்டும் ஓர் ஊரடங்கை தடுக்க முடியும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.