எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்!

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார். மோடி சமூகத்தினர் அனைவரையும் இழிவு படுத்தும் வகையில் ராகுல்காந்தி பேசியதாக இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார்.இந்த கிரிமனல் அவதூறு வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்தி, 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். கடந்த வாரம் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

இந்த நிலையில், தீர்ப்பு அளிக்கும் போது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி எச்.எச்.வர்மா தெரிவித்திருந்தார். அதன்படி பலத்த பாதுகாப்புடன் ராகுல் காந்தி நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எச்எச் வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து தண்டனை விவரத்தை வாசித்த நீதிபதி எச்.எச்.வர்மா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை விதித்து உத்தரவிட்டார். உடனடியாக பிணைக்கு ராகுல் காந்தி தரப்பு முறையிட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 30 நாட்களுக்குள் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் என சூரத் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8 (3)ன் படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு ஆண்டுகளோ அதற்கு மேலோ தண்டனை பெற்றால் தனது பதவியை இழப்பார் என கூறுகிறது. இந்நிலையில் தற்போது எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.