6 மணி நேரத்தில் கோவை To சென்னை பயணம்…வருகிறது வந்தே பாரத் ரயில்!

நாட்டின் அதிவேக ரயில் சேவைக்காக வந்தே பாரத் ரயில் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அதிவேக ரயில்கள் இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு மைல்கல் என அரசு கூறி வரும் நிலையில், இதன் சேவை வழித்தட எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்த வரை சென்னையில் இருந்து மைசூர் வழித்தடத்தில் ஒரு வந்தே பாரத் ரயில் தற்போது இயங்கி வருகிறது.

இந்நிலையில், கோவை – சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கவுள்ளது. வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி இந்த புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை – சென்னை இடையே உள்ள 495.28 கி.மீ தூரத்தை இந்த வந்தே பாரத் ரயில் 6 மணிநேரம் 10 நிமிடங்களில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணிக்கு கோவையில் புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்றடையும். பின்னர், மதியம் 2.20 மணிக்கு சென்னையில் புறப்படும் இந்த ரயில் 8.30 மணிக்கு கோவை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் புதன்கிழமையை தவிர்த்து வாரத்தின் மற்ற அனைத்து நாட்களும் இயங்கும் எனவும் கோவை – சென்னை வழித்தடத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது.

பொதுவாக இந்த வழித்தடத்தில் விரைவு ரயில்கள் பயண நேரம் 7.5 மணிநேரம் எனவும், சதாப்தி ரயில் பயண நேரம் 7 மணிநேரமாகவும் உள்ளது. அப்படி இருக்க இந்த வந்தே பாரத் ரயில் 6 மணிநேரத்தில் பயணத்தை நிறைவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தனது தமிழ்நாடு பயணத்தின் போது வந்தே பாரத் ரயில் சேவையுடன், சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை விரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்கவுள்ளார். இது திருவாரூர், கரைக்குடி வழியாக தென்காசி சென்று பின்னர் செங்கோட்டையை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.