கேரளா: தடுப்புச்சுவரில் மோதி தனியார் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் பலி – 26 பேர்படுகாயம்

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம், மலப்புரம் அருகே இன்று காலையில் கோழிக்கோடு – திருச்சூர் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது , அதில் ஏராளமானோர் பயணித்தனர்.

விபத்து
பேருந்தானது, குட்டிப்புரம் அருகே செல்லும்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலை அருகே உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதன் காரணமாக அருகே நின்று கொண்டிருந்த கார் மீது பஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ் இரண்டு துண்டாக நொறுங்கியது. விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், இந்த கோர விபத்தில் கோழிக்கோட்டைச் சேர்ந்த வைஷ்ணவ் என்கிற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து காரணமாக உள்ளே சிக்கிய பயணிகளை காப்பாற்ற மீட்புக்குழுவினர் பேருந்தின் பகுதியை வெட்டி மீட்டனர். இதனையடுத்து விபத்தில் காயமடைந்த 26 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விசாரணை
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் வேகம் மற்றும் மழையின் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.