சன்ரைசர்ஸ் அணியை 72 ரன் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.

அபாரமாக ஆடிய யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் தலா 54 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்கள் விளாசினார். இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது.

முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. துவக்க வீரர் அபிஷேக் சர்மா, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி ஆகிய இருவரும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

அதன்பின்னர் மயங்க் அகர்வால், ஹாரி ப்ரூக் ஜோடி சற்று நேரம் தாக்குப்பிடித்தது. இந்த ஜோடியை சாகல் பிரித்தார். ஹாரி ப்ரூக் 13 ரன்னில் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் (1), கிளென் பிலிப்ஸ் (8) ஆகியோரும் விரைவில் விக்கெட்டை இழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால், 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

52 ரன்கள் எடுப்பதற்குள் 6 முக்கிய விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அணி தோல்வியை நோக்கி பயணித்தது. அடில் ரஷித் (18), கேப்டன் புவனேஸ்வர் குமார் (6), அப்துல் சமது (32 நாட் அவுட்), உம்ரான் மாலிக் (19 நாட் அவுட்), ஆகியோரின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களே எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. யுஸ்வேந்திர சாகல் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டிரென்ட் போல்ட் 2 விக்கெட், ஹோல்டர், அஷ்வின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.