ராஜபக்சக்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் போலியானவை! – நாமல் சொல்கின்றார்.

ராஜபக்சக்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் போலியானவை என நிரூபமணமாகியுள்ளன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“களவு, கொள்ளையென்றெல்லாம் ராஜபக்சக்களுக்கு எதிராகக் கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ராஜபக்சக்களுக்கு வெளிநாடுகளில் சொத்துகள், கணக்குகள் உள்ளன என்றும் கூறப்பட்டது. ஆனால், அவை போலியான என்பது உறுதியாகியுள்ளது.

நல்லாட்சியின் போது விசாரணை நடத்தப்பட்டது, எனினும், வெளிநாட்டில் கணக்கு இருப்பு இருப்பது கண்டறியப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். அதேபோல் ராஜபக்சக்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அவர்கள் விடுதலையாகினர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறினார். நல்லாட்சியின்போது இவர்களே ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை வகித்தனர்.

எனவே, நாம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி.

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் அவசியம். அது நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டால் முழு ஆதரவு வழங்கப்படும். அத்துடன், போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற சரத்தும் அந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமே பலமான அரசியல் கட்டமைப்பு – பொறிமுறை உள்ளது. அதனால்தான் கட்சி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.