குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்! – உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி சஜித் தெரிவிப்பு.

“இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் பாரபட்சமற்ற விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஈஸ்டர் தாக்குதலின் வலிமிகுந்த நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மனித வாழ்வுக்கு விடுதலை அளித்த இயேசு கிறிஸ்துவின் துன்பம்,மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்து இன்று உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

மனித குலத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்காக, இயேசு கிறிஸ்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கல்வாரியின் கொல்கொத்தா மலையின் உச்சியில் சிலுவையில் அறையப்பட்டார். கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த நாள், அதாவது உயிர்த்தெழுதல், உயிர்த்த ஞாயிறு என்று அழைக்கப்படுகின்றது.

உயிர்த்தல் என்பது மனிதன் கடப்பதற்கு இயேசு வழங்கிய மாபெரும் பரிசு, அன்பைப் பற்றி நாம் பேசினால், ஈஸ்டர் நிச்சயமாக அதன் திருப்புமுனையாகும். ஈஸ்டர் அன்று புனித சபை பிறந்தது அன்பு மதம் உலகம் முழுவதும் பரவியது.

இதற்கிடையில், இலங்கையில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு அன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் உட்பட 8 இடங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது நாட்டுக்கு ஒரு கரும்புள்ளியை உருவாக்கியது.

ஈஸ்டர் ஆராதனைகளில் கலந்துகொண்ட கிறிஸ்தவ பக்தர்கள் உட்பட ஒரு குழுவினர் உயிரிழந்தனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் பாரபட்சமற்ற விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஈஸ்டர் தாக்குதலின் வலிமிகுந்த நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்.

அதற்காக அன்றும், இன்றும், நாளையும் உறுதியாக,மாறாமல் முன்நிற்போம் என்பதை குறிப்பிட விரும்புவதுடன், அந்தத் தாக்குதலின் நோக்கம் எதுவாக இருந்தாலும், அது ஒரு கோழைத்தனமான, மனிதாபிமானமற்ற, இழிவான தாக்குதல் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

மத நம்பிக்கையுடனும், மனித நேயத்துடனும், மத நடவடிக்கைகளுக்காக தேவாலயங்களுக்கு வரும் அப்பாவி மக்களைக் குறிவைத்து நடத்தப்படும் கொடூரமான தாக்குதல்கள்,குருட்டு பக்தி கொண்ட சில பைத்தியக்காரர்களின் மனிதாபிமானமற்ற நிலையை உணர்த்துகின்றது.

ஆனால், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி பாவத்தால் அன்பு சிலுவையில் அறையப்பட்டாலும், நிச்சயமாக அன்பே உயர்வாகக் காணப்படும்.

உலக கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் இனிய உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்கள்!” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.