ஊடகங்களை அடக்கும் சட்டத்துக்கு எதிராக விமல் போர்க்கொடி!

“ஊடகங்களை அடக்கி ஒடுக்க இந்த அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தால் அரசிலுள்ள அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஒரு புறம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், மறுபுறம் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டம் என இரண்டு கொடூர சட்டங்களை ஒரே தடவையில் கொண்டுவர அரசு முயற்சிக்கின்றது.

மக்களின் ஜனநாயக உரிமையை, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் எந்தவொரு சட்டத்துக்கும் நாம் ஆதரவு வழங்கமாட்டோம்.

இந்த அரசு திருந்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். அதைவிடுத்து எதேச்சதிகார வழியில் இந்த அரசு பயணித்தால் மக்களுடன் சேர்ந்து அரசை ஓட ஓட விரட்டியடிப்போம். நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.