மக்களை ஏறி மிதிக்கும் அரசுக்கு எதிராக ஒன்றாக எழுவோம்! – சஜித் அழைப்பு.

“மக்களின் ஜனநாயக உரிமைகள், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. அரசின் இந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் போராட இன, மத, சாதி பேதமின்றி சிவில் அமைப்புக்களும், பிரஜைகளும் ஒன்றாக அணிதிரள வேண்டும்.”

இவ்வாறு அறைகூவல் விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களுக்குப் பயந்த, மக்கள் அபிப்பிராயத்தை ஊசலாட்டும் திறமையற்ற தற்போதைய அரசு 24 மணிநேரமும் 365 நாட்களுமாகத் தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசு தேர்தலை எதிர்கொள்ளும் அச்சத்தால் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வழங்காமல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அழுத்தங்களைப் பிரயோகித்தும் தேர்தலைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றது.

அவ்வாறே, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டம் போன்ற சட்டங்களின் ஊடாக மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்தி மக்களை அடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் கீழ், ஊடகங்களை அடக்கி, மக்கள் தங்கள் உரிமைகளுக்காக முன்நிற்கும் போது அவர்களைப் பயங்கரவாதிகள் என்று அழைத்து மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைக் கூட மீறும் வகையில் அரசு செயற்படுகின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.