ரணில் – ராஜபக்ச குழு உடம்பில் பட்டாசுகளைக் கட்டிக்கொண்டு காட்டுக்குள் பாயும் நிலை வரும்!

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டால். பேஸ்புக்கில் படம் ஒன்று போடுவதாக இருந்தாலும் இனி ரணிலிடம்தான் கேட்க வேண்டும்” – என்று ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினர் வசந்த சமரசிங்க கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்:-

“மக்கள் ஆணை இல்லாமல் நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யப்போகின்றார். அதற்கு மொட்டுக் கட்சியினர் ஆதரவு வழங்குகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி கிடைத்தது ஏதோ வீரச் செயல்போல் நினைக்கின்றார்கள் இவர்கள். இந்த வீரச் செயலை வைத்துத்தான் தொழில்சங்கப் போராட்டங்களை அடக்குகின்றார்கள்.

அதுமட்டுமா, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வரப்போகின்றார்கள். பேஸ்புக்கில் படம் ஒன்று போடுவதாக இருந்தாலும் இனி ரணிலிடம்தான் கேட்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கிடைத்தமைக்காகப் பட்டாசு சுடுகின்றார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை முழுமையாக நடைமுறைக்கு வரும்போது ரணில் – ராஜபக்ச குழு உடம்பில் பட்டாசுகளைக் கட்டிக்கொண்டு காட்டுக்குள் பாயும் நிலை வரும்.

சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று முன்னேறிய நாடுகள் கிடையாது; முன்னேறவும் முடியாது. இது பொருளாதாரத்தை நெருக்கும் ஒன்று. பணம் இருக்கின்றவர்கள் வாழ்வார்கள்; இல்லாதவர்கள் விஷம் அருந்தி சாவார்கள்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.