ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது மும்பை.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 13 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மும்பை.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது.

மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் டுவான் யான்சென் நீக்கப்பட்டு ஜோப்ரா ஆர்ச்சர் இடம் பெற்றார். பஞ்சாப் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. தோள்பட்டை காயத்தில் இருந்து மீளாத கேப்டன் ஷிகர் தவான் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை. இதனால் சாம் கர்ரன் மீண்டும் அணியை வழிநடத்தினார்.

‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி, பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் இறங்கினர். அடித்து ஆடிய மேத்யூ ஷார்ட் 11 ரன்னில் கேமரூன் கிரீன் பந்து வீச்சில் பியுஷ் சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். பெரன்டோர்ப் வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சர் விளாசிய பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னில் (17 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அர்ஜூன் தெண்டுல்கர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். 3-வது ஆட்டத்தில் ஆடிய அர்ஜூன் வீழ்த்திய 2-வது விக்கெட் இதுவாகும்.

பியுஷ் சாவ்லா வீசிய ஒரு ஓவரில் லியாம் லிவிங்ஸ்டன் (10 ரன்), அதர்வா டெய்ட் (29 ரன்கள்) ஆகியோருக்கு செக் வைத்தார். இதனால் அந்த அணி 83 ரன்னுக்குள் (9.4 ஓவரில்) 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சூழலில் பொறுப்பு கேப்டன் சாம் கர்ரன், ஹர்பிரீத் சிங்குடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹர்பிரீத் சிங் 41 ரன்னில் (28 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கேமரூன் கிரீன் பந்து வீச்சில் போல்டு ஆனார். சாம் கர்ரன் 26 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். ஐ.பி.எல். போட்டியில் அவர் அடித்த 3-வது அரைசதம் இதுவாகும். அபாரமாக ஆடிய சாம் கர்ரன் 55 ரன்னில் (29 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிரடியாக ஆடிய ஜிதேஷ் ஷர்மா தன்பங்குக்கு 25 ரன்கள் (7 பந்து, 4 சிக்சர்) சேர்த்த நிலையில் பெரன்டோர்ப் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த ஹர்பிரீத் பிரார் (5 ரன்) கடைசி பந்தில் ரன்-அவுட் ஆனார்.

20 ஒவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் அந்த அணி 96 ரன்களை திரட்டியது. ஷாருக்கான் ரன் எதுவுமின்றி களத்தில் இருந்தார். மும்பை தரப்பில் பியுஷ் சாவ்லா, கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டும், அர்ஜூன் தெண்டுல்கர், பெரன்டோர்ப், ஜோப்ரா ஆர்ச்சர் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். அர்ஜூன் தெண்டுல்கர் 3 ஓவர்கள் வீசி 48 ரன்கள் விட்டுகொடுத்தார். அவர் தனது கடைசி ஓவரில் மட்டும் 31 ரன்களை வாரி வழங்கினார்.

பின்னர் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 1 ரன்னில் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். இதைத்தொடர்ந்து கேமரூன் கிரீன், கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் வேகமாக மட்டையை சுழற்றினர். ரோகித் சர்மா 44 ரன்னில் (27 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) லிவிங்ஸ்டன் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் சூறாவளியாக சுழன்றடித்தார். 38 பந்துகளில் அரைசதத்தை எட்டிய கேமரூன் கிரீன் 67 ரன்னில் (43 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) நாதன் எலிஸ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 23 பந்துகளில் அரைசதத்தை கடந்த சூர்யகுமார் யாதவ் 57 ரன்னில் (26 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் அதர்வா டெய்ட்டிடம் கேட்ச் ஆனார்.

மும்பை அணி தோல்வி

கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா (3 ரன்), நேஹல் வதேரா (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

20 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட்டுக்கு 201 ரன்களே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. டிம் டேவிட் 25 ரன்களுடன் (13 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டும், நாதன் எலிஸ், லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

7-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். மும்பை அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.கடைசி ஓவரில் பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் அடுத்தடுத்த பந்துகளில் மிடில் ஸ்டம்பு இரண்டு முறை இரண்டாக உடைந்து சிதறியது.

Leave A Reply

Your email address will not be published.