கோட்டாவுடன் சேர்ந்து நாட்டை நாசமாக்கியதில் பஸிலுக்கு முக்கிய பங்கு – விமல் பகிரங்கக் குற்றச்சாட்டு.

“கோட்டாபய ராஜபக்சவுடன் சேர்ந்து நாட்டை நாசமாக்கியவர்களில் பஸில் ராஜபக்ச முக்கிய பங்கு வகிக்கின்றார்” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கு நாம் முடிவெடுத்த போது அவர் தோல்வியடைந்த – இயலாத தலைவராக இருக்கவில்லை.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக – நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக அவருக்குக் கொடுத்த பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்தார்.

ஆனால், கோட்டா ஜனாதிபதியானவுடன் பி.பி. ஜயசுந்தர, மிலிந்த மொரகொட, அமெரிக்கத் தூதுவர் மற்றும் பஸில் ராஜபக்ச என எல்லோரினதும் வலையிலும் வீழ்ந்துவிட்டார்.

இறுதிக் காலத்தை அமெரிக்காவில் கழிக்க வேண்டும் என்பதுதான் கோட்டாவின் திட்டம். அதற்காக அமெரிக்காவைச் சந்தோஷப்படுத்த வேண்டிய தேவை கோட்டாவுக்கு ஏற்பட்டது.

அமெரிக்கா இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைத்துக் கொடுத்து இறுதியில் நாட்டை நாசமாக்கிவிட்டார் கோட்டா. அவருடன் சேர்ந்து நாட்டை நாசமாக்கியவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச முக்கிய பங்கு வகிக்கின்றார்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.