கிழக்கு சிவில் சமூகங்களும், பள்ளிவாசல்கள் சம்மேளனமும் ஹர்த்தாலுக்கு ஆதரவு!

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூகங்களும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனமும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முற்றாக எதிர்க்கின்றோம். பல ஆண்டுகளாகத் தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் திணிக்கப்பட்டிருந்தது. அண்மைக்காலமாக முஸ்லிம் சகோதரர்கள் மீதும் திணிக்கப்பட்டிருந்தது. தற்போது அரகலய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிராக அது திணிக்கப்பட்டு இருந்தது. சிங்கள மக்களும் இந்தச் சட்டத்தை எதிர்த்துள்ளனர்.

ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போராட்டங்களை ஒடுக்க இப்படியான கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.

எனவே, நாளை நடைபெறும் ஹர்த்தாலுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குகின்றோம்” – என்று திருகோணமலை சிவில் சமூகங்களின் கூட்டமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் திருநாவுக்கரசு கோபகன் தெரிவித்தார்.

“சிறுபான்மை இனங்களை ஒடுக்க முற்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்” – என்று அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் தலைவர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார்.

“பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்ச்சியாக தமிழர்களின் இருப்பை நசுக்குகின்ற ஒரு கருவியாக கொண்டுவரப்படவுள்ள நிலையில் அதனை எதிர்த்து வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு எமது பூரண ஆதரவைத் தெரிவிக்கின்றோம்” – என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகச் செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவர் சபாரத்தினம் சிவயோகநாதன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.