காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு, தமிழ்நாடு அரசு கடிதம்

காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு, தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.

காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், காவிரியில் நடப்பு ஆண்டு 2022 – 23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி. நீர், தமிழ்நாட்டிற்கு கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை காட்டிலும், இது 484 டி.எம்.சி கூடுதல் நீர் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுவதாகக் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுவதாகவும், முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளதாகவும் சாடியுள்ளார். எனவே, காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.