இனப்பிரச்சினை விடயத்தில் தூரமாகிச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை – தமிழ்க் கட்சிகளிடம் ரணில் தெரிவிப்பு.

“நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உடன்பாடு இந்த ஆண்டு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இனப்பிரச்சினை விடயத்தில் தூரமாகிச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று நான் தமிழ்க் கட்சிகளிடம் கூறுகின்றேன். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமாயின், தயவுசெய்து இந்தப் பொறிமுறைக்குள் வந்து விசேடமாக நாடாளுமன்றத்தில் ஒரு அரசாக நாம் அனைவரும் இணைந்து செயற்படுவோம்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (01) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தினூடாக உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

‘2048 வெல்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மேதிக் கொண்டாட்டத்தில் 68 பல்வேறு தொழில்சார் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“நான் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அக்கட்சியை ஆதரிக்கும் உங்கள் அனைவருக்கும் உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களாக நாடு கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்த நேரத்தில் நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றேன். நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக வீழ்ச்சியடைந்து, உணவுத் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததோடு, மக்கள் வீதிகளுக்கு இறங்கியிருந்தனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பையும், நாடாளுமன்றத்தையும் சிதைக்க சிலர் முயன்றனர்.

இன்று நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளது. உணவுத் தட்டுப்பாடு இல்லை. மேலும் நாட்டில் ஜனநாயகக் கட்டமைப்பு செயற்படுகின்றது. அச்சுறுத்தல்கள் இன்றி நாடாளுமன்றம் செயற்படுகின்றது. ஒவ்வொருவரும் தங்களுடைய பணியை தடையின்றி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நான் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்க முன்னர், ஒரு விடயத்தைப் பற்றி சிந்தித்தேன். ஐக்கிய தேசியக் கட்சி நாட்டைப் பற்றி சிந்திக்கும் கட்சி. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு கொள்கை அரசியலில் இருக்கும் கட்சி. நாங்கள் அதனை விட்டுவிலகவில்லை. சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வது அவசியம், உலக வங்கியின் உதவி தேவை. நாம் 07 பில்லியன் டொலர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் 2020 தேர்தல் விஞ்ஞாபனத்தில், அன்று நாம் குறிப்பிட்டிருந்தோம். கட்சி என்ற வகையில் நாங்கள்தான் அந்த உண்மைகளை குறிப்பிட்டோம். மற்ற அனைவரும், பொருளாதாரப் பிரச்சினை இருப்பதை அறிந்து, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.

அதன் விளைவு என்ன, உண்மையைக் கூறிய ஐக்கிய தேசியக் கட்சி இறுதியாக தேசியப்பட்டியலில் வீழ்ந்தது. கசப்பானாலும் உண்மையை மக்களுக்குச் சொல்வதே எங்களின் கொள்கையாகும். அதனால் நாங்கள் அதிலிருந்து பின்வாங்கவில்லை. 2020 மற்றும் 2021 இலும் எங்களின் இலக்கு அறிவிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு, இந்தப் பிரச்சினை தீவிரமடைந்தபோது, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கினேன்.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த போது எதிர்க்கட்சியின் ஏனைய குழுக்கள் கலந்துரையாடலைப் புறக்கணித்த போதும் நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கட்சியில் இருந்து கலந்துகொண்டோம்.

எனது முயற்சி அரசியல் அல்ல, நாட்டின் பொருளாதாரத்தை முறையாகக் கையாள்வதும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும் ஆகும். எனவே, நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பலம் என்னிடம் இருந்ததாலும், எனக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்களுடன் இணைந்து செயற்பட்டு அந்தப் பெறுபேறுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையாலும் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

அந்த நம்பிக்கை எனக்கு இருந்ததற்கு முக்கிய காரணம், 2001 இல் அரசு கவிழ்ந்தபோது, பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த முடிந்ததுதான். 2015 இல், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், முதன்மை வரவு – செலவுத் திட்ட மேலதிகத்தைப் பெறவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

எனவே, இந்தப் பொருளாதார நெருக்கடியை என்னால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அப்படியானால், இந்த நேரத்தில், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதோடு, அரசியல் ஸ்திரத்தன்மையையும் உருவாக்குவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது.

தற்போது நாடாளுமன்றம் இயங்கி வருகின்றது. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின்படி செயற்படுபவர்கள் பலர் உள்ளனர். எனவே, இதற்கு எனக்கு உதவிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கும் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் காரணமாகவே நாம் முன்னோக்கிச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை, இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன, அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரும் ஆதரவு வழங்கினர். அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன்.

இப்போது நாம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை அமுல்படுத்த வேண்டும். அதற்கு அவசியமான சட்டதிட்டங்களைக் கொண்டு வந்து 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வர நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் நான் அதில் திருப்தியடையவில்லை.

எமக்கு இந்தப் பழைய பொருளாதார முறையுடன் இனியும் முன்னோக்கிச் செல்ல முடியாது. மொத்தத் தேசிய உற்பத்தியை ஆண்டுக்கு 6% – 7% என்ற அளவில் விரைவாகக் கொண்டு வரக்கூடிய பொருளாதாரத்தை நாம் உருவாக்க வேண்டும்.

என்னிடம் இரண்டு எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஒருவர் டி.எஸ். சேனநாயக்காவின் கீழ், ஆசியாவின் இரண்டாவது வலுவான பொருளாதாரத்தை நாங்கள் கொண்டிருந்தோம். அப்போது எம்மால் இங்கிலாந்துக்கு கடன் கொடுக்க முடிந்தது. ஜே.ஆர் ஜெயவர்தனவின் கீழ் நாம் திறந்த பொருளாதாரத்துடன் முன்னேறினோம். திறந்த பொருளாதாரத்தை உருவாக்கும் இரண்டாவது பயணத்தை இலங்கை தான் தொடங்கியது. அதன் பிறகுதான் சீனா அதனை நோக்கி வந்தது.

எனவே, இந்தப் பின்னணியில் இலங்கையை மீண்டும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். பொருளாதாரத்தில் யார் கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள் என்பதில் நாம் ஆப்கானிஸ்தானுடன் போராட முடியாது. எனவே, நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். முன்னேறிய பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

அன்று ஜே.ஆர் ஜெயவர்தன செய்தது போல், நாம் பல புதிய திட்டங்களை முன்னெடுத்து புதிய பொருளாதாரத்தில் இணைய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை. நாம் சிந்திக்க வேண்டியது நமது எதிர்காலத்தைப் பற்றி அல்ல, நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும்.

2048 இல் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போது, முன்னேறிய பொருளாதாரம் கொண்ட நாடாக நாம் மாற வேண்டும். இந்தியா அந்த இலக்கை 2047 இல் வைத்துள்ளது. சீனா 2049 அந்த இலக்குகளை அடைய உழைக்கின்றது. 2048 ஆம் ஆண்டை இலங்கை அபிவிருத்தி ஆண்டாக மாற்ற வேண்டும். இன்றைய இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காக இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்றோம்.

அந்தப் புதிய பொருளாதாரம் மிகவும் போட்டி நிறைந்த பொருளாதாரமாக இருக்க வேண்டும். சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதாரமாக இருக்க வேண்டும். பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் குறிப்பாக ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்ட போட்டி பொருளாதாரமாக இருக்க வேண்டும். நாங்கள் அங்கு செல்ல முயற்சிக்கின்றோம். எனவேதான் அனைவரின் ஆதரவையும் கோருகின்றோம்.

குறுகிய கால அரசியல் பற்றி சிந்திக்க வேண்டாம். இன்று நாளையல்ல, 2048ஐப் பற்றி சிந்தியுங்கள். நாட்டை முன்னேற்ற வேண்டும். இன்று, நாளை என நினைத்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம், மீண்டும் நாடாளுமன்றத்துக்கான மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள இந்தப் புதிய பாதையில் செல்ல வேண்டும். எனவே, குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் உங்கள் அனைவருக்கும், நாங்கள் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் கட்சியாக இருப்போம் என்று நான் பரிந்துரைக்கின்றேன். நாம் புதிதாக சிந்திப்போம். இந்த நாட்டின் பழைய அரசியல் செயல்முறையை மாற்றும் கட்சியாக நாம் மாறுவோம். அதைத்தான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

நாடாளுமன்றம் மீதான மக்களின் ஆதரவை மீண்டும் பெற்றுக்கொள்ள இந்த புதிய பாதையில் செல்ல வேண்டும். எனவே, குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் உங்கள் அனைவருக்கும், நாங்கள் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் கட்சியாக இருப்போம் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

நாம் புதிதாக சிந்திப்போம். இந்த நாட்டின் பழைய அரசியல் செயல்முறையை மாற்றும் கட்சியாக நாம் மாறுவோம். அதைத்தான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் அங்கீக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முன்னெடுத்துச் செல்ல எண்ணியுள்ளோம்.

நாம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டுமாயின், நாம் இரண்டு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

முதலாவது நாட்டில் உள்ள இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இதுகுறித்து பேச்சு நடத்தி வருகின்றோம். இந்த வருட இறுதிக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளேன். யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது. பெரும்பான்மை சிங்கள மக்களையும், சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களையும் பாதுகாத்துக் கொண்டு முன்நோக்கிச் செல்ல வேண்டும். இதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

இரண்டாவது இந்த நாட்டில் அரசியல், பொருளாதார முறைமையில் மாற்றம் வேண்டும் என்று இளைஞர்கள் கோருகின்றனர். நாம் இதனை செவிமடுக்க வேண்டும். இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காகப் பல கட்டங்களாக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கும், மேற்பார்வைக்குழுவுக்கும் தலா ஐந்து இளைஞர்களை நியமிக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்தப் பணிகளை மே மாதத்தில் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம். கரு ஜயசூரியவின் ஆலோசனைக்கமைய மக்கள் சபைகளை உருவாக்குவதற்காக அதற்கான சட்ட மூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். நாம் அனைவரும் உடன்பாட்டுடன் புதிய பொருளாதார முறைமையை ஏற்படுத்துவோம். புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவோம். நாம் முன்நோக்கிப் பயணிப்போம்.

அதனால் நான் இன்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களிடம் இந்த புதிய பயணத்தை ஆரம்பிப்போம் என்று கோரிக்கை விடுக்கின்றேன். கடந்த வாக்கெடுப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்தனர். திறந்த பொருளாதார முறைமையை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம். எனவே, வேற்றுமைகளை மறந்து முழு நாடாளுமன்றத்தில் அரசாகப் பணியாற்றுவோம் என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

இனப்பிரச்சினை விடயத்தில் தூரமாகிச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று நான் தமிழ்க் கட்சிகளிடம் கூறுகின்றேன். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமாயின், தயவுசெய்து இந்தப் பொறிமுறைக்குள் வந்து விசேடமாக நாடாளுமன்றத்தில் ஒரு அரசாக நாம் அனைவரும் இணைந்து செயற்படுவோம். இடதுசாரி கட்சிகள் தமது கொள்கைகளுக்கமைய இந்த நடைமுறையை பின்பற்றமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

நாம் தற்போது எதிர்காலத்தை நோக்கிப் பார்க்க வேண்டும். புதிய வேலைத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். புதிய வேலைத் திட்டங்களுடன் அனைவரும் இணைந்துகொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

தொழிற்சங்கங்கள், ஏனைய அமைப்புக்கள் என அனைவரையும் இந்த வேலைத் திட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன். புதிய வேலைத் திட்டங்கள் குறித்த அமைச்சரவையின் யோசனைகளை, நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளிடம் சமர்ப்பித்து, மக்கள் சபையுடனும் கலந்தாலோசிப்போம். இதற்கான பரந்த இணக்கப்பாட்டை எட்ட விரும்புகின்றோம். அப்படியாயின், எமக்கு அச்சமின்றி முன்நோக்கிச் செல்ல முடியும்.

இது 25 ஆண்டுகால வேலைத் திட்டம். இந்த 25 ஆண்டுகால வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி,நாட்டைக் கட்டியெழுப்பி, மேம்படுத்துவோம் என்று அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன். இதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து எனது உரையை நிறைவு செய்கிறேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.