இன்னும் சில நாட்களில் எரிவாயு விலை மேலும் குறையும்! – அரசு அறிவிப்பு.

இன்னும் சில நாட்களில் எரிவாயு விலை மேலும் குறையும் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (01) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘2048 வெல்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மே தினக் கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது:-

“சுதந்திரத்துக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இந்த நாட்டைத் தொழில்மயமாக்கவும், இலவச சுகாதாரம் மற்றும் தொழில் பேட்டைகளை உருவாக்கவும் உழைத்தனர்.

அரசாங்கம் மாறும்போது கொள்கைகளை மாற்றுவது அன்றிலிருந்து இன்றுவரை இருக்கும் பலவீனம். 2019ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு சென்றபோது, முதன்மைக் கணக்கில் மேலதிகம் இருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு கொள்கைகள் மாறின. இது நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தியது.

நெருக்கடியான நேரத்தில், அவர் மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். தலைகீழாக இருந்த வரிக் கொள்கையை மறுசீரமைத்தார். வரிக் கொள்கையைப் மாற்றினோம்.

மறைமுக வரிகள் அதிகரிக்கும் போது மக்கள் அனைவரும் அதைச் செலுத்துகின்றார்கள். அதை மாற்றும் போது வலிக்கின்றது. தயக்கத்துடன், நாங்கள் அதை செய்ய வேண்டியிருந்தது.

எரிவாயு மற்றும் எண்ணெய் வரிசைகளை அகற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்தார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொருளாதாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்நியச் செலாவணியைப் பாதுகாக்க இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பணவீக்கம் 70 சதவீதமாக இருந்த ஒரு நாட்டை ஜனாதிபதி பொறுப்பேற்றார். கடந்த மாத இறுதியில், பணவீக்கம் 50 சதவீதமாகக் கொண்டுவரப்பட்டது.

இந்த ஆண்டு இறுதிக்குள், பணவீக்க விகிதத்தை ஒற்றை இலக்கமாகக் குறைக்க முயற்சித்து வருகின்றோம். பொருட்களின் விலையும் குறைகின்றது. எண்ணெய் விலை மேலும் குறையும். இன்னும் சில நாட்களில் எரிவாயு விலை மேலும் குறையும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தங்கள் காரணமாக நாட்டு மக்களுக்கு இவ்வாறான பலன்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.