ரணிலை ஆசியாவின் உச்சியில் அமர்த்த வேண்டியது எம் கடமை – அவரின் சகா வஜிர கூறுகின்றார்.

இன, மத பேதங்கள் அற்ற தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை ஆசியாவின் உச்சியில் அமர்த்த வேண்டியது எமது கடமையாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (01) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘2048 வெல்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மே தினக் கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சி கண்டிருந்த போதும் கட்சியுடன் இணைந்திருந்தோரே இங்கு அதிகளவில் கூடியிருக்கின்றனர்.1994 இற்குப் பிறகு ஏறக்குறைய முப்பது வருடங்களாக உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒருவரை கண்டு அஞ்சின. அது தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே. அவரை வீழ்த்த எல்லா வழிகளிலும் முயன்றனர்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முயன்ற எமது கட்சின் தலைவர்கள் பலரும் எதிர்பாராத விதத்தில் மரணம் அடைந்தனர். ஜே.ஆர்.ஜயவர்தன, பிரேமதாஸ, லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க போன்ற தலைவர்கள் வீதிகளில் கொல்லப்பட்டனர். ஆனாலும், ரணில் விக்ரமசிங்க என்ற ஒரு தலைவர் மிஞ்சி இருந்தமையாலேயே இன்று கொழும்பைச் சுற்றி இடம்பெறும் மே தினக் கூட்டங்களுக்கு வருவதற்கு மக்களுக்கு எரிபொருள் கிட்டியது. அத்தோடு இன, மத பேதங்கள் அற்ற தலைவரான ரணிலை ஆசியாவின் உச்சியில் அமர்த்த வேண்டியது எமது கடமையாகும்.

முழு நாடாளுமன்றமும் அரச செயற்பாடுளில் ஈடுபடும் வகையிலான முறையொன்றினை உருவாக்க அவர் முயற்சிக்கிறார். டீ. எஸ் சேனாநாயக்கவும் இந்நாட்டவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டுதான் சுதந்திரத்தைப் பெற்றார். அந்தவகையில் தற்போதைய ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீயிட்டாலும் அவர் முடங்கிப் போய்விடவில்லை. அதனால் 2048 என்ற இலக்கை நோக்கி முன்னேறுவோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.