ரணிலின் தலைமைத்துவம் வரிசை யுகத்துக்கு முடிவு கட்டியது! – ரவி புகழாரம்.

ரணிலின் தலைமைத்துவம் வரிசை யுகத்துக்கு முடிவு கட்டி நாட்டை முன்னேற்றியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘2048 வெல்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மே தினக் கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது:-

“நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் மே தினத்தைக் கொண்டாடியிருந்தாலும், இன்று மிக முக்கியமான தருணத்தில் மே தினத்தைக் கொண்டாடுகின்றோம்.

கடந்த காலத்தில் வரிசை யுகம் இருந்தது. தற்போதைய தலைமைத்துவம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து நாட்டை முன்னேற்றியுள்ளது.

இந்தப் பிரச்சினை இந்த நாட்டின் உழைக்கும் மக்களை மட்டுமல்ல முதலீட்டாளர்களையும் பாதித்துள்ளது. அதனால்தான் புதிதாகச் சிந்திக்க வேண்டும்.

உரிமைக்காக மட்டும் போராடும் காலத்தில் நாம் இல்லை. நாட்டில் ஒரு புதிய சகாப்தத்துக்காக நாங்கள் போராட விரும்புகின்றோம்.

உழைக்கும் மக்கள் அனைவரும் வாழக்கூடிய அமைதியான சூழல் நாட்டில் நிலவ வேண்டும். அந்த யதார்த்தத்தை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டை முதன்மைப்படுத்தி உழைப்போம். நாட்டுக்காக உழைப்போம். அப்படிப்பட்ட நாட்டின் உரிமைகளுக்காக போராட வேண்டிய அவசியம் இல்லை. அந்த உரிமைகள் எப்போதும் உங்களை வந்தடையும்.

நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற வேண்டும். பொருளாதாரத்தை வலுப்படுத்த, உழைக்கும் மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையே நல்லிணக்கம் தேவை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.