பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த டிஆர்டிஓ விஞ்ஞானி கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த டிஆர்டிஓ விஞ்ஞானி கைது செய்யப்பட்டுள்ளார். டிஆர்டிஓ(DRDO) எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் அங்கமான டிஆர்டிஎல் (DRDL – Defense Research & Development Laboratory) அமைப்பில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றியவர் பிரதீப் குரூல்கர்.

இவர் புனேவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகத்தில் ஆய்வு மற்றும் மேம்பாடு எனப்படும் R&D பிரிவில் முன்னணி இயக்குனர் பொறுப்பில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ஓய்வு பெற ஆறு மாத காலமே உள்ள நிலையில், ஹனிட்ராப் எனப்படும் பாலியல் வலையில் சிக்கி பாகிஸ்தான் உளவாளிக்கு கசியவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.

இந்த தகவல் மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படையின் கவனத்திற்கு சென்ற நிலையில், 60 வயதான பிரதீப்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னாள் ஐஐடி மாணவரான இவர், 1988இல் இருந்து டிஆர்டிஓவில் பணிபுரிந்து வந்துள்ளார். பல முன்னணி திட்டங்களில் இவர் பங்களிப்பு இருந்துள்ளது.

இந்நிலையில், சமீபமாக இவரை சமூக வலைத்தளத்தின் மூலமாக ஒரு பெண் புகைப்படங்களை காட்டி தனது வலையில் வீழ்த்தியுள்ளார். அதை தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக வாட்ஸ்ஆப் வீடியோ கால் மற்றும் வாய்ஸ் மெசேஜ் மூலமாக ரகசிய தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த அதிர்ச்சி தகவல் மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படை கவனத்திற்கு வரவே விஞ்ஞானி பிரதீப்பை கைது செய்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விஞ்ஞானி தனது பொறுப்பை துஷ்பிரயோகம் செய்யும் விதமாக வெளிநாட்டிற்கு தகவல்களை தந்து, சொந்த நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார்.

இது சட்டவிரோதமானது என்றுள்ளது. தொடர்ந்து விஞ்ஞானி பிரதீப் மீது மும்பையில் உள்ள கலாசௌகி காவல் நிலையத்தில் அரசு ரகசிய சட்டம் 1923ன் பிரிவு 03(1)(c), 05(1)(a), 05(01)c, 05(1d) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.