இலங்கைத் தமிழர்கள் மேலும் 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கைத் தமிழர்கள் இன்று காலை தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காகக் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 244 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டம், 8 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், நான்கு பெண்கள், மூன்று ஆண்குழந்தை, ஒரு பெண் குழந்தை உட்பட 10 பேர் முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து நேற்றிரவு பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள முதல் மணல் திட்டில் இறங்கியுள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள் மணல் திட்டில் காத்திருப்பதைக் கண்ட அப்பகுதியில் மீன்பிடித்த இராமேஸ்வரம் மீனவர்கள் மரைன் பொலிஸ் ஆய்வாளருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்குப் பின்னர் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து சென்ற அகதிகளின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.