ரணில் – மொட்டு கூட்டாட்சியில் திருடர்களை எப்படிப் பிடிப்பது? கேள்வி எழுப்புகின்றார் சஜித் அணி எம்.பி.

“ரணில் விக்கிரமசிங்கவும் மொட்டுக் கட்சியும் ஒன்று சேர்ந்து இருக்கும் வரை ஒருபோதும் திருடர்களைப் பிடிக்க முடியாது. திருடர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இருக்கும் போது எப்படித் திருடர்களை பிடிப்பது.?”

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஊழல் தடுப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாக அரசு தெரிவிக்கின்றது. அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து என்ன பிரயோசனம்? இறுதியில் நீதிமன்றத்தையே அவமதித்துவிட்டுச் செல்வார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவும் மொட்டுக் கட்சியும் ஒன்று சேர்ந்து இருக்கும் வரை ஒருபோதும் திருடர்களைப் பிடிக்க முடியாது. திருடர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இருக்கும் போது எப்படித் திருடர்களைப் பிடிப்பது?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெற்றால் ராஜபக்ச குடும்பத்தில் இருந்துதான் ஒருவர் பிரதமராகுவார். ஆனால், ரணில் வெற்றி பெறப்போவதில்லை. தான் வந்ததும் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டன ரணில் நினைத்துக்கொண்டு இருக்கின்றார். எங்களுக்குத்தான் தெரியும் ரணில் யாரென்று.

மக்களைச் சிக்கலில் தள்ளாமல் அவர்களை நல்ல முறையில் வாழ வைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.