கேரளாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு

கேரளாவின் மலப்புரத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுற்றுலா பயணிகள் 22 பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் ஒட்டம்பூர் துவால்திரா என்ற பகுதியில் பயணித்த சுற்றுலா படகு, நேற்று மாலை 7 மணியளவில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான படகில் 30 பேர் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் 4 குழந்தைகள் உட்பட 22 பேர் பரிதாக உயிரிழந்தனர். படகில் பயணம் மேற்கொண்டவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் அவர்களின் விவரங்கள் உறுதியாக தெரியவில்லை. படகு கவிழ்ந்து நீரில் மூழ்கிய சிலரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உரிய அனுமதி பெறாமல் படகு இயக்கியது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. கேரளாவில் படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.