ஓபிஎஸ் மற்றும் டிடிவி எனும் இரண்டு அமாவாசையும் ஒன்று சேர்ந்தால், ஒட்டுமொத்த தமிழகமும் இருட்டாகிவிடும் – ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்றும், ஓ.பன்னீர்செல்வம், தினகரன் அணியை பாஜக ஏற்றுக் கொள்ளாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “திமுக என்ற தீயசக்தியுடன் சேர்ந்து கொண்டு ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதாக விமர்சித்தார். கடல் கடந்து தொழில் செய்வதற்காக சபரீசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதாகவும், திருச்சியில் திமுகவின் ஒத்துழைப்புடன் பொதுக்கூட்டம் சிறப்பாக நடந்ததாக ஓபிஎஸ் பேசியிருப்பதாகவும் கூறினார்.

திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். டிடிவி தினகரன் உடனான சந்திப்பால் ஓ.பன்னீர்செல்வம் மீது அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

தர்ம யுத்த காலத்தில் சசிகலா என்று குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது சின்னம்மா என கூறுவது ஏன் என்றும் வினவினார். மேலும், பாஜகவுடன் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி அமைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஜெயக்குமார் , ஓபிஎஸ் முதலில் யாருக்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கினார். சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கி, அவர்களை மாஃபியா கும்பல், தமிழ்நாட்டை சூறையாடிய குடும்பம் என கடுமையான விமர்சித்தார்.ஓபிஎஸ் மற்றும் டிடிவி எனும் ரெண்டு அமாவாசையும் ஒன்று சேர்ந்தால், ஒட்டுமொத்த தமிழகமும் இருட்டாகிவிடும். டிடிவி-யே சில காலங்களில் ஓபிஎஸ்-ஐ கழற்றிவிடுவார்.” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.