பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணம்!

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த வாகனத்தில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய – மஹாபலஸ்ஸ பகுதியில் இரவு நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்துக்கிடமாக பயணித்த லொறியொன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை மீறிய லொறிச் சாரதி, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனம் செலுத்திய போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டுக்கு மத்தியில் தப்பிச் சென்ற சந்தேகநபர்கள் லொறியிலிருந்த மாடுகளைக் காட்டுப் பகுதியில் விடுவித்து, வீரகட்டிய பகுதிக்குத் தப்பிச் சென்றனர்.

அதன்போது, பொலிஸார் அவர்களைச் சுற்றிவளைத்தனர். சம்பவத்தில் லொறியில் இருந்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு முன்னதாகவே உயிரிழந்தார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

லொறியிலிருந்த மேலும் மூவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

அதேவேளை, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிக் காயமடைந்த பசுவொன்று கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இதேவேளை, லொறியைத் துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் வாகனத்துக்கு இடையூறு ஏற்படுத்திய கார் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.