பாதுகாப்புத் தரப்பினர் கொழும்பின் பல இடங்களில் முற்றுகை

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய சிலர் அரசாங்கத்தின் மீது சில அழுத்தங்களை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று (12) இரவு முதல் பாதுகாப்புத் தரப்பினர் கொழும்பின் பல இடங்களில் தமது பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

எவ்வாறாயினும், கொழும்பு பல்கலைக்கழகத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்த நிலையில், கலகத்தனமாக நடந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 750 பேர் கொண்ட குழுவொன்று கலகத்தனமான முறையில் களம் இறங்கவுள்ளதாக கிடைத்த புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய, கொழும்பு நகரின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு தரப்பினர் இவ்வாறான நடவடிக்கைகளை திடீரென மேற்கொண்டுள்ளனர்.

சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலகத்தனமாக நடந்து கொள்ள முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அதன்படி, கொழும்பு பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதிக்கு பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ் கலகத் தடுப்பு பிரிவு மற்றும் முப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மற்றும் முப்படையினருக்கு மேலதிகமாக, தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தை சுற்றிலும் கொள்ளுப்பிட்டி சந்தி, அலரி மாளிகை இஆகியவற்றைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.