நான் ஒருபோதும் குறுக்கு வழியில் பிரதமர் பதவிக்கு வரமாட்டேன்! – மஹிந்த அறிவிப்பு.

“எமது ஆட்சியே தற்போதும் நடக்கின்றது. இந்தநிலையில் சதித் திட்டங்கள் ஊடாகப் பிரதமர் பதவியை நான் கைப்பற்றப்போவதாக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது மட்டுமன்றி வேடிக்கையானதும்கூட.”

இவ்வாறு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சதித்திட்டத்தின் ஊடாக பிரதமர் பதவியைப் பெற்றுக்கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ச முயல்கின்றார் என்று வெளியான செய்தி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மொட்டுக் கட்சிக்கே கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு வழங்கினர். அதன் பிரகாரம் பிரதமர் பதவியை நான் பொறுப்பேற்றேன்.

நாட்டில் ஏற்பட்ட ஒரு சில தவறான நடவடிக்கைகளால் கடந்த வருடம் பிரதமர் பதவியிலிருந்து விலகினேன்.

எனினும், எமது கட்சியின் ஆட்சியே தொடர்கின்றது. எமது கட்சியின் உறுப்பினரே பிரதமராகவும் உள்ளார்.

மீண்டும் ஒரு தேர்தலில் மக்களின் ஆணையை ஏற்று நான் பிரதமராவேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.