இலங்கைக் கடற்படையினரால் 14 சீனர்களின் சடலங்கள் மீட்பு! (Navy Video)

இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கைக் கடற்படையினரால் 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று இலங்கைக் கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கடற்படை சுழியோடி குழுவுடன் கடற்படையின் கடல் கண்காணிப்புக் கப்பலான எஸ்.எல்.என்.எஸ். விஜயபாகு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கைக் கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர், முன்னதாக 2 சடலங்களை மீட்டனர்.

கப்பலின் பல்வேறு இடங்களில் இருந்து மேலும் 12 பணியாளர்களின் சடலங்களை இலங்கைக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த கப்பலில், 38 பேர் இருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கவிழ்ந்த மீன்பிடிக் கப்பலில் இருந்து காணாமல்போன பணியாளர்களை மீட்கும் முயற்சியை சீனா குறைத்துள்ளது என்று ‘ரொய்ட்டர்ஸ்’ தெரிவித்துள்ளது.

விபத்தில் சிக்கிய எவரையும் உயிர் பிழைக்க வைக்கக்கூடிய குறைந்தளவான சாத்தியம் உள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சீனாவின் அரச ஊடகம் தெரிவிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.