வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள்

கர்நாடகாவில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியது. இதில் பெங்களூரு நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. கனமழை மற்றம் வெள்ளத்தில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் தாழ்வான இடத்தில் இருந்த நகைக் கடைக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதில் கடையின் தரைத்தளத்தில் இருந்த சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளத்தின் வேகத்தில் நகைகள் அடித்துச் செல்லப்பட்ட போது, கடையின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களால் எதுவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடையில் இருந்த சுமார் 80 சதவிகித நகைகள் வெள்ளத்தில் அடித்து சென்றதாக கடையின் உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். எஞ்சிய நகைகளும் நனைந்த நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். நகைகளை மீட்பது தொடர்பாக மாநகராட்சியிடம் நகைக்கடை உரிமையாளர் உதவி கோரி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.