விசாரணைகளின்றி இனப்படுகொலை என்று எப்படிச் சொல்லலாம்? – கனேடியப் பிரதமரின் கருத்துடன் உடன்பட முடியாது என்கிறார் சந்திரிகா.

“கனேடியப் பிரதமர் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்தது என்று கூறும் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். விசாரணைகள் எதுவுமின்றி இப்படியான சொல்லை கனேடியப் பிரதமர் பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

‘மே 18ஐ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாகப் பிரகடனம் செய்யும் பிரேரணையை நாடாளுமன்றம் கடந்த ஆண்டில் ஒருமனதாக நிறைவேற்றியது. இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்களதும், தப்பிப் பிழைத்தோரதும் உரிமைகளுக்காகவும், இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொள்வோருக்காகவும் குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தமாட்டாது’ என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டில் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் நீதியான விசாரணை எதுவும் இதுவரை நடைபெறவில்லை. அதனால்தான் பாதிக்கப்பட்ட தரப்பினர் சர்வதேசத்திடம் நீதிவேண்டி நிற்கின்றார்கள். இந்தநிலையில் தான் வெளிநாடுகளின் தலைவர்களும் சர்வதேசப் பிரதிநிதிகளும் இலங்கை அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதுடன் நாட்டை அவமானப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஒரு நீதியான உள்நாட்டு விசாரணை நடத்திருந்தால் வெளியில் இருப்போர் நாட்டையும், அரசையும் இவ்வாறு தூற்றி இருக்கமாட்டார்கள்.

எனினும் கனேடியப் பிரதமர் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்தது என்று கூறும் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். விசாரணைகள் எதுவுமின்றி இப்படியான சொல்லை கனேடியப் பிரதமர் பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.