பிரதமர் பதவி வேண்டாம்; கௌரவமாக இருங்கள்! – மஹிந்தவுக்கு நாமல் அறிவுரை.

மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்ற கதையால் நாமல் ராஜபக்சவும் சீற்றமடைந்துள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

மஹிந்த மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்ற தகவலை விசாரிப்பதற்காக அவரைத் தொடர்பு கொண்டார் அவரின் மூத்த மகனான நாமல்.

“தயவு செய்து அதற்கு முயற்சிக்க வேண்டாம். இனி அது உங்களுக்கு வேண்டாம். கௌரவமாக இருங்கள்” என்று மஹிந்தவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் நாமல்.

கடந்த வருடம் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்காக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பல அழுத்தங்களைக் கொடுத்து வந்தார்.

இறுதியாக மஹிந்தவின் மகன்களான நாமலையும் ரோஹிதவையும் அழைத்து அவர்களின் ஊடாகத்தான் மஹிந்தவுக்கு அழுத்தம் கொடுத்தார் கோட்டா.

அதற்கமைய பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற அழுத்தத்தை மஹிந்தவுக்குக் கொடுத்தனர் அவரின் மகன்கள். அதை மஹிந்த ஏற்றிருந்தார். ஆனால், இடையில் புகுந்து குழப்பியது மஹிந்தவின் சகாக்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த போன்றவர்களே. எனினும், இறுதியில் மக்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விரட்டியடிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மஹிந்த பிரதமர் பதவியை ஏற்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகின்றார் அவரின் மூத்த மகனான நாமல். இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் நாமல் உள்ளார். – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.