யாழில் ‘நாட்டுப்பற்றாளர்’ ஊடகவியலாளர் நடேசனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடேசனின் திருவுருவப் படத்துக்கு யாழ். ஊடக அமையத்தின் இணைப்பாளரும் மூத்த ஊடகவியலாளருமான கு.செல்வக்குமார் மலர் மாலை அணிவிக்க, பொதுச் சுடரை யாழ். ஊடக அமையத்தின் பொருளாளரும் ஊடகவியலாளருமான கம்சன் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் தொடர்பில் அவர் காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர் செல்வக்குமார் நினைவுரையாற்றும் போது,

“ஊடகவியலாளர் நடேசன் 2004 ஆம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு 2023 ஆம் ஆண்டு இன்றுடன் 19 ஆண்டுகளைக் கடக்கின்ற போதும் சுடப்பட்ட அன்றைய நாள்தான் நினைவில் வருகின்றது. இத்தனை வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்காமல் தொடர்ந்தும் அவரின் பாதையில் நாம் பயணிக்கும் போது அச்ச உணர்வுதான் இன்றும் எழுகின்றது.

நாளை இவரின் பாதையில் பயணிக்கும் ஊடகவிலாளர்களுக்கு என்ன நடக்குமோ என்ற நம்பிக்கை இல்லாத காலத்தில் இருக்கின்றோம்.

ஏனெனில் சுடப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பில் முதற்கட்ட விசாரணையையே ஆரம்பிக்காத இந்த அரசுகளால் ஊடகவியலாளர் மத்தியில் அச்ச உணர்வு இன்றும் தொடர்கின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.