அதிகார வரம்பை மீறிச் செயற்படுவது கண்டனத்துக்குரியது! – சஜித் அணி காட்டம்.

“நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய புலனாய்வாளர்களும் சட்டம் – ஒழுங்கைக் காக்க வேண்டிய பொலிஸாரும் தங்கள் அதிகார வரம்பை மீறிச் செயற்படுவது கண்டனத்துக்குரியது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான கெடுபிடிகள் தொடர்பில் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:–

“வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளினதும் அவர்களின் ஆதரவாளர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்.

மக்களின் தோழனாக இருக்க வேண்டிய பொலிஸார் மக்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் ஆயுதமுனையில் அச்சுறுத்துவது இந்த நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்துகின்றது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் அரசு சாக்குப் போக்குக் காரணங்களைக் கூறாமல் உண்மை நிலைவரங்கள் தொடர்பில் ஆராய வேண்டும். குற்றவாளிகள் யாராக இருப்பினும் தண்டிக்கப்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.